Wednesday, December 31, 2008

"மேற்க்காண்டைப்" பூரிப்போம்! 2009

காலமற்ற காலமிதில்
கணக்கொழிந்த விசும்பிதனில்

நொடிகளிது வருடமிது
எனநமது மனமிரையும்!

மனமற்ற 'மேற்பாழில்'
காலமிலை கணக்குமிலை!

மாற்றமொன்று தேவையென
தேறுகின்ற மாந்தமனம்

மாறிவிடும் தேறிவிடும்
வேறுவழி பார்த்துவிடும்!

ஊழ்தனையும் உட்பக்கம்
காண்டுவிடும் உள்வலியால்

மேதினியில் மேன்மைபல
"மெய்மையினால்" செய்திடுவோம் !

கடலுக்கு துவக்கமிலை
காற்றுக்கு முடிவுமிலை

காலத்தை அளப்பதற்கோ
"மின்மினிக்கு" வழியுமிலை!

நீளுகிறப் பெருவழியில்
இடைதோன்றி மறைமனுவின்

சிறுகணக்கு இதுவெனினும்
புத்தாண்டு வாழ்த்திநிற்போம் !

ஒன்றிரண்டு அச்சடித்த
பழந்தாள்கள் முடிவுபெற்று

புதுத்தாள்கள் புறப்படட்டும்
தவறில்லை முயற்சிக்கு-

ஆரம்பம் ஓரிடத்தில்
அமைத்திடுதல் அறிவுடைமை !

உலகத்தோடு ஒட்ட ஒழுகல்
முதற்கல்வி குறள் சொல்லும் !

உலகத்தார் போற்றுகின்ற
"மேற்க்காண்டைப்" பூரிப்போம்!

-மோகன் பால்கி
Copy Protected by

Friday, October 17, 2008

நான் இயற்கையின் கூறு! I am a part of Nature!

நான் என்னில் வேர் விட்டு
இறுக்கமாய் எனைப் பற்றி
என்னிலிருந்து
என் மேல் உயர்ந்தவன் !

எனது கிளைகளில்
பூத்துக் கனிபவன் !

என்னை
எந்த மனித சக்தியும்
திசை திருப்பி
வீழ்த்தி விட முடியாது!

சேற்றிலே பிறந்தாலும்
செந்தாமரை எப்படி
சேற்றில் ஒட்டாமல்
நீர் பரப்புக்கு மேலே உயர்ந்து
கம்பீரமாய் மலர்கிறதோ
அவ்வாறே
மனிதர்களுக்கு மத்தியில்
பிறந்தாலும்
நான்
மனிதனல்லன் !

நான்
பஞ்ச பூதங்களின் கலவை
இயற்கையின் அடையாளம்
ஆதியந்தமற்ற
இப்பிரபஞ்சத்தின்
ஓர் உன்னதக் கூறு!

-மோகன் பால்கி